போதைப்பொருள் பணத்தில் சொத்துக்கள் கொள்முதல்? 53 வயது பெண் கைது.




 போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களை கொள்முதல் செய்ததாக சந்தேகிக்கப்படும் 53 வயதுடைய பெண் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 14, ஃபெர்குசன் வீதி பகுதியில் வசிக்கும் குறித்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், 2021 மார்ச் 31ஆம் திகதி பொலிஸ் மா அதிபரால் குறித்த முறைப்பாடு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பல்வேறு சொத்துக்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த சொத்துக்களை முடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் முடக்கப்பட்ட சொத்துக்களில்:

  • ஜா-எல பகுதியில் 8.66 பேர்ச்சஸ் காணி – 14 இலட்சம் ரூபாய்
  • 6 வங்கிக் கணக்குகளில் இருந்த பணம் – 59 இலட்சம் ரூபாய்
  • கொழும்பு 14 பகுதியில் 3 கடைகள் – 225 இலட்சம் ரூபாய்
  • கொழும்பு 14 பகுதியில் மேலும் ஒரு கடை – 75 இலட்சம் ரூபாய்
  • கொழும்பு 14 பகுதியில் மூன்று மாடி வீட்டுடன் கூடிய காணி – 200 இலட்சம் ரூபாய்

ஆகியவை அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி கொள்முதல் செய்யப்பட்டவை என விசாரணைகளில் தெரியவந்ததைத் தொடர்ந்து, சந்தேகநபர் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.