வெனிசுவேலாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கராகஸில் மக்கள் பீதி.

 


வெனிசுவேலாவின் கரீபியன் கடற்கரைப் பகுதியில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மோரோன் (Morón) நகருக்கு மேற்கே சுமார் 28 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அதிர்வு சுமார் 13 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கராகஸில் உள்ள பல கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அதிர்ந்த நிலையில், மக்கள் அச்சத்துடன் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

ஆரம்ப கட்ட தகவல்களின்படி உயிரிழப்புகள் அல்லது பாரிய சேதங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், சேத மதிப்பீட்டு பணிகள் தொடர்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்டை நாடான கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களால் சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், கராகஸில் உள்ள ஒரு வங்கி கட்டிடம் சேதமடைந்துள்ளதாகக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

மேலும், முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வெனிசுவேலாவில் மீண்டும் இரண்டு சக்திவாய்ந்த அதிர்வுகள் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவை முறையே 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.