புதிய சட்டத்தரணிகளுக்கு பிரதம நீதியரசரின் முக்கிய அறிவுரை.



 ஒரு நபர் தொழில்முறை வல்லுநராக உருவாகுவது சவாலான பயணமாகும் என்றும், வெற்றிகரமான தொழில்முறை வாழ்க்கை என்பது அதிக பணம் சம்பாதிப்பதைக் குறிக்காது என்றும் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற புதிய சட்டத்தரணிகளின் சத்தியப்பிரமாண நிகழ்வில் உரையாற்றிய அவர், தொழிலின் மூலம் பெறப்படும் அறிவும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் தரமான சேவையும் தான் உண்மையான தொழில்முறை வெற்றியின் அளவுகோல்கள் என வலியுறுத்தினார்.

புதியதாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சட்டத்தரணிகளை வாழ்த்திய அவர், அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தின் உத்தியோகத்தர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், அவர்களின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை நீதித்துறையின் செயல்பாட்டில் முக்கிய பங்காற்றுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், உயர்ந்த திறமை மற்றும் நற்பெயரைக் கொண்டவர்களே சட்டத்துறையில் இணைக்கப்பட வேண்டும் என சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தரணிகள் தங்களது தொழில்முறை தரத்தையும், தொழிலின் கண்ணியத்தையும் தொடர்ந்து பேண வேண்டிய பொறுப்பு கொண்டவர்கள் என தெரிவித்த பிரதம நீதியரசர், தொழிலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மையை நிலைநிறுத்துவது மிக முக்கியமானதாகும் என்றார்.