சமந்தா நடிப்பில் ‘மா இன்ட்டி பங்காரம்’ வெற்றி.



 தெலுங்கு நடிகை சமந்தா நடிப்பில், சிறிய இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியான “மா இன்ட்டி பங்காரம்” திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நந்தினி ரெட்டி இயக்கிய இந்தப் படம், கதாநாயகியை மையப்படுத்திய உணர்ச்சிகரமான கதையாக 1980களின் பின்னணியில் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை சித்தரிக்கிறது.

சமந்தாவுடன் இணைந்து அவரது கணவர் ராஜ் நிடிமொரு தயாரித்திருந்த இந்த திரைப்படம், வெளியானதிலிருந்து சுமார் 60 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, சமீபத்தில் நடைபெற்ற வெற்றி விழாவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தயாரிப்பாளர் ராஜ் நிடிமொரு கூறியதாவது, முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அதிக உற்சாகமும், விறுவிறுப்பும் கொண்டதாக இருக்கும் என்றும், கதைக்கரு ஏற்கனவே தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், முதல் பாகத்தில் பணியாற்றிய அதே தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் தொடர்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.