போலி விளம்பரங்கள் மூலம் மோசடி: இலங்கையில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு.

 


கடந்த ஒரு மாத காலப்பகுதியில் இணையவழி நிதி மோசடிகள் தொடர்பாக 360-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலை குழு (SLCERT) தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் முதன்மை தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல, இணையம் ஊடாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது பொதுமக்கள் அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, வெசாக் மற்றும் பொசோன் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு பிரபல வர்த்தக நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட போலி விளம்பரங்கள் மூலம் மக்களின் தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்களை மோசடிக்காரர்கள் சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடன் அட்டை விபரங்கள் மற்றும் இணைய வங்கி தகவல்களைப் பெறும் நோக்கில் பல்வேறு போலி இணைய இணைப்புகள் மற்றும் சலுகை விளம்பரங்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே, இணையம் வழியாக ஏதேனும் கொடுப்பனவு அல்லது பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் முன், அது அதிகாரப்பூர்வ மற்றும் பாதுகாப்பான இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.