காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற11 வயது மாணவன் உயிரிழப்பு.



 கொழும்பு காலிமுகத்திடல் கடற்பரப்பில் நேற்று மாலை நீராடச் சென்ற ஆறு சிறுவர்கள் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில், மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றவுடன் அங்கிருந்த பொதுமக்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதன் போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஐந்து சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட சிறுவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், மேலும் மூவர் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய பாடசாலை மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, சம்பவத்தின் போது நீரில் மூழ்கி காணாமல் போன மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய மற்றுமொரு மாணவனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரும், கடற்படை சுழியோடி குழுவினரும் இணைந்து கடற்பரப்பில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.