தற்போது நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், நோய் பரவலைத் தடுக்கும் அவசர நடவடிக்கையாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் டாக்டர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் நோக்கில், கடந்த ஜூன் 8, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் நாடு தழுவிய விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் பிரதேச மட்டங்களில் நுளம்பு ஒழிப்பு வாரம் ஒன்றை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக்கூடிய இடங்களை சுத்தம் செய்து பராமரிப்பதன் மூலம் நோய் பரவலைக் குறைக்க முடியும் என்பதால், பொதுமக்கள் இந்த நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
