அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்த அறிவிப்பு: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடும் சரிவு

 100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரானும் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளன.

சந்தைத் தரவுகளின்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 3.55 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 83.77 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, டபிள்யூ.டி.ஐ (WTI) மசகு எண்ணெய் 4.10 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய் 80.78 அமெரிக்க டொலராக விற்பனையாகிறது.

மேலும், மேர்பன் ரக மசகு எண்ணெயின் விலையும் 4.23 சதவீதம் வீழ்ச்சியடைந்து ஒரு பீப்பாய் 83.02 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையி
லான பதற்றம் மற்றும் மோதல் காரணமாக கடந்த மே மாதத்தில் மசகு எண்ணெய் விலைகள் உச்சத்தை எட்டியிருந்தன. எனினும், இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்படலாம் என்ற தகவல்கள் அண்மைக் காலமாக பரவியதையடுத்து, எண்ணெய் விலைகள் படிப்படியாகக் குறையத் தொடங்கின.

இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான இணக்கப்பாட்டை அமெரிக்காவும் ஈரானும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை திடீர் சரிவை சந்தித்துள்ளது.

மேலும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், மசகு எண்ணெய் விலை மேலும் குறையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.