செம்மணி பகுதியில் தொடரும் அகழ்வுப் பணி – நீதிமன்ற கண்காணிப்பில் நடவடிக்கை.


 


செம்மணி–சிந்துபாத்தி மனித புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் 14ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் தொடர்ந்து இடம்பெற்றது.

இன்றைய நிலவரப்படி மொத்தம் 270 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 266 எலும்பு எச்சங்கள் முறையாக துப்புரவாக்கப்பட்டு, அடையாளமிடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதில் 257 மற்றும் 258 என அடையாளம் காணப்பட்ட எலும்புத் தொகுதிகள் சிறுவர்களுடையவை என முதற்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

றுகுணு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப் பணிகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும், கழுத்தில் அணியப்படும் தாயத்து போன்ற ஒரு தகடு ஒன்றும் சான்றுப் பொருளாக கண்டறியப்பட்டுள்ளது.

அகழ்வுப் பணிகளில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழு, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.