பல பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை





 நாட்டின் பல பகுதிகளில் இன்று (18) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட வானிலை அறிக்கையின் படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

அதேவேளை, அநுராதபுர மாவட்டத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பும் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை நேரங்களில் மின்னல் தாக்கம் மற்றும் தற்காலிக பலத்த காற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.