சம்பள முரண்பாடு உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (21) முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
தங்களது கோரிக்கைகள் தொடர்பில் பல முறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டபோதிலும், வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாததே இந்த நடவடிக்கைக்கு காரணம் என சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் உமேஷ் அலுதாபொல, RDA பொறியியலாளர்கள் இனிமேல் அதிகாரசபைக்கு வெளியே நடைபெறும் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கேற்கமாட்டார்கள் என கூறினார்.
மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் நேரடியாக ஒப்படைக்கப்படாத, ஆனால் தேசிய தேவையாகக் கருதி மேற்கொள்ளப்படும் பல பணிகளிலிருந்தும் விலக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த தீர்மானம் காரணமாக பல திட்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும் என்றும், தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
.jpeg)