”சி. ஜோசப் விஜய் எனும் நான்....” “அரசில் பணம் இல்லைனு ஆரம்பிக்காதீங்க!” – விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த முதல் அரசியல் பதிலடி

 மு.க. ஸ்டாலின், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவரது முதல் உரைக்கு அரசியல் ரீதியான பதிலடியையும் கொடுத்துள்ளார்.





தமிழகத்தின் 13 ஆவது முதலமைச்சராக இன்று (10) காலை பதவியேற்ற விஜய்க்கு, ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

பதவியேற்பு உரையில் முதலமைச்சர் விஜய், “முன்னாள் அரசு கஜானாவை காலி செய்து விட்டுச் சென்றுள்ளது. என் ஆட்சியில் ஒரே அதிகாரம்தான் இருக்கும்” என தெரிவித்திருந்தார். மேலும் தமிழக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறினார்.

இந்தக் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், “அரசிடம் பணம் இல்லை என்று ஆரம்பிக்காதீங்க… அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும் ஆட்சித் திறமையும்தான் வேண்டும்” என கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவிட், வெள்ளப் பாதிப்புகள் மற்றும் மத்திய அரசின் அழுத்தங்கள் போன்ற பல சவால்களை சமாளித்தபோதும், மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு வெற்றிகரமாக முன்னெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“10 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துவிட்டு சென்றுள்ளது கடந்த அரசு” என்ற விஜயின் குற்றச்சாட்டுக்கும் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கடன் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருப்பதாகவும், அது குறித்து கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே தெளிவாக விளக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவது எவ்வளவு சிக்கலானது என்பதை விஜய் விரைவில் புரிந்துகொள்வார் என்றும், “மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை எங்களைப் போலவே நீங்களும் கற்றுக்கொள்வீர்கள்” என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, விஜயின் தலைமையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும் என மீண்டும் வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்டாலின், புதிய அரசின் செயல்பாடுகளை மக்கள் கவனமாக எதிர்பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.