ஈரான் முற்றுகையில் பிரித்தானியா விலகல்: ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்க வேண்டும் என நிலைப்பாடு!




ஈரானிய துறைமுகங்களை குறிவைத்து அமெரிக்கா மேற்கொள்ளவுள்ள இராணுவ முற்றுகை நடவடிக்கையில் United Kingdom நேரடியாக பங்கேற்காது என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, Iran துறைமுகங்களை தடுக்க பிரித்தானிய கடற்படைக் கப்பல்கள் அல்லது வீரர்கள் பயன்படுத்தப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. எனினும், பிரித்தானியாவின் கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் மற்றும் ஆளில்லா விமான எதிர்ப்பு திறன்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அப்பகுதியில் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரித்தானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், உலக பொருளாதாரத்திற்கும் சர்வதேச வர்த்தகத்திற்கும் முக்கியமான கடல் போக்குவரத்து சுதந்திரத்தை பாதுகாப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் Strait of Hormuz திறந்த நிலையில் தொடர வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார நிலைத்தன்மைக்கும், பல நாடுகளின் உள்நாட்டு வாழ்க்கைச் செலவுகளுக்கும் கடல் வழிப் போக்குவரத்து தடையின்றி நடைபெறுவது மிக முக்கியமானது என்பதால், இந்த நிலைப்பாடு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.