Donald Trump, Iran நாட்டுடன் இரண்டு வாரங்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த போர்நிறுத்தம் நடைமுறைக்கு வர, சில முக்கிய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதில் முக்கியமான நிபந்தனையாக, Strait of Hormuz நீரிணையை முழுமையாகவும் உடனடியாகவும் பாதுகாப்புடன் திறக்க ஈரான் ஒப்புக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி இரு தரப்பினருக்கும் பொருந்தும் இருதரப்பு போர்நிறுத்தம் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் குண்டுவீச்சுகள் மற்றும் இராணுவ தாக்குதல்கள் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Donald Trump தனது Truth Social சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், Shehbaz Sharif மற்றும் Asim Munir ஆகியோருடன் நடைபெற்ற உரையாடல்களின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்டிருந்த இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதை ஏற்று, தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், Iran தரப்பிலிருந்து 10 அம்சங்களைக் கொண்ட முன்மொழிவு கிடைத்துள்ளதாகவும், அது எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையாக அமையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, மத்திய கிழக்கில் நீடித்த அமைதியை உருவாக்கும் நோக்கில் இந்த இரண்டு வார கால அவகாசம் முக்கியமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக மட்டுமின்றி, மத்திய கிழக்கு அமைதி முயற்சிகளில் பங்காற்றும் ஒருவராக, இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுவது பெருமையாக இருப்பதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
