வெளிநாட்டில் மறைந்த குற்றவாளிகள் 30 பேர் மீட்பு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வெளிநாட்டில் மறைந்த குற்றவாளிகள் 30 பேர் மீட்பு




வெளிநாடுகளில் ஒளிந்திருந்து வந்த பாரிய குற்றச்செயல்களில் தொடர்புடைய சந்தேகநபர்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கையின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் 30 முக்கிய குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வர முடிந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இன்று (30) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எஃப்.யு. வுட்லர் விளக்கமளித்தார்.

இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினரான ‘மிதிகம சூட்டி’ என அழைக்கப்படும் பிரபாத் மதுசங்கவும் இந்த பட்டியலில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார். இவர் கொலை, கொள்ளை, ஆயுதம் வைத்திருத்தல், ஆயுதக் கடத்தல், கள்ளப் பணப் பரிவர்த்தனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கீழ் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் ‘Red Notice’ இல்லாமலும் சில சந்தேகநபர்களை நாட்டிற்கு கொண்டு வர முடிந்துள்ளதாகவும், இதன் கீழ் இதுவரை 13 பேர் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் தேதி இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இரு நபர்களும் இந்த வகையில் அடங்குவதாக கூறப்பட்டது.

இந்நேரம் வரை மொத்தம் 88 திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச ‘Red Notice’ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், முன்பு கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி தொடர்பான பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.