இன்று (31) நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து வகைகளின் விலைகள் ரூ. 30-ஆல் உயர்த்தப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதேபோல், சிற்றுண்டி வகைகளின் விலைகள் ரூ. 10-ஆலும், தேநீர் மற்றும் பால் தேநீர் போன்ற பானங்களின் விலைகள் ரூ. 5-ஆலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் மின்சாரக் கட்டண உயர்வின் தாக்கமே இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவகங்களில் மின்சார பயன்பாடு பொதுவாக 180 அலகுகளை மீறுவதால், அதிகரித்த மின்சாரச் செலவினத்தை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செலவுகளை எதிர்கொண்டு தொழில்துறையை தொடர்ந்து நடத்துவதற்காகவே இவ்வாறு உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் விளக்கமளித்துள்ளது.
