மத்திய கிழக்கில் தொடரும் பதற்றமான நிலைமையை முன்னிட்டு, வளைகுடா நாடுகளுக்கு தமது முழுமையான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயத்தை அன்டோனியோ கொஸ்டா உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் மேற்கொண்டு வரும் வான்வழி மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் பொதுமக்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், வளைகுடா ஒத்துழைப்பு பேரவை நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியான ஒற்றுமையுடன் நிற்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகம் தலைவர் ஷேக் மொஹமட் பின் ஸயட் அல் நஹ்யான் உடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர் இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அந்த உரையாடலிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு மீண்டும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலைநிறுத்த, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளும் பதற்றத்தை குறைத்து, தூதரக பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
