டெங்கு பரவலை கட்டுப்படுத்த 3 நாள் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம் – 36,000-க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவு.



 நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மூன்று நாட்கள் கொண்ட விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, இன்று (08), நாளை (09) மற்றும் 10ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

12 மாவட்டங்களைச் சேர்ந்த 72 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை மையமாகக் கொண்டு இந்த விசேட திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. டெங்கு பரவக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு, கொசு பெருக்கம் ஏற்படும் சூழல்களை அகற்றும் நடவடிக்கைகள் இதன் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, கடந்த ஜூன் 5ஆம் திகதி வரை நாடு முழுவதும் 36,168 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறை, காலி, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் கணிசமான அளவில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த ஆண்டில் இதுவரை 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர்களில் மூவர் சிறுவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.