2.5 மில்லியன் டொலர் விவகாரம் பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு.



 திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும் வழங்கிய விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கை நிதி குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹர்ஷ டி சில்வா கூறியதாவது, மத்திய வங்கி மற்றும் திறைசேரியுடன் மூன்று சுற்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. இரு தரப்பும் தனித்தனி அறிக்கைகளை சமர்ப்பித்துள்ள நிலையில், சில விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த அடிப்படையில் குழு ஒரு வரைவு அறிக்கையை தயாரித்து உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளது. அவர்களின் கருத்துகள் பெறப்பட்ட பின்னர் வரும் செவ்வாய்க்கிழமை இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அடுத்த வாரம் அந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளும் ஒருமித்தமாக பெறப்பட்ட பிறகே இறுதி பதிப்பு சமர்ப்பிக்கப்படும் என்றும் ஹர்ஷ டி சில்வா விளக்கியுள்ளார்.