நீர்கொழும்பு நகைக் கொள்ளை வழக்கில் இருவர் கைது.



 நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற தங்க நகைக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (04) நீர்கொழும்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் வெல்லம்பிட்டிய மற்றும் கொலன்னாவை பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 44 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, புத்தளம் பொலிஸ் பிரிவில் பதிவான மற்றொரு தங்க நகைக் கொள்ளைச் சம்பவத்துடனும் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் 12 தங்க மோதிரங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், நீர்கொழும்பில் இடம்பெற்ற நகைக் கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.