தெற்காசியாவின் முதல் சோலார்–பயோ கேஸ் ஹைபிரிட் பேக்கரி அடுப்பு இலங்கையில் அறிமுகம்



 முன்கூட்டியே கணிக்க முடியாத காலநிலை சூழ்நிலைகளிலும் இடையறாத செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில் சூரிய சக்தி மற்றும் உயிர் வாயு (biogas) மூலங்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட சோலார் ஹைபிரிட் பேக்கரி அடுப்பை அறிமுகப்படுத்தியதன் மூலம், தெற்காசியாவில் இத்தகைய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய முதல் நாடாக இலங்கை திகழ்கிறது.

மே 22 அன்று கொழும்பு சின்னமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த அறிமுக நிகழ்வு Incitare Sri Lanka மற்றும் Global Rethinking Finance Collaborative (GRFC) ஆகியவற்றின் ஏற்பாட்டில், ஜேர்மன் டெக் கிளிநொச்சியுடன் இணைந்து நடைபெற்றது. இதில் சுவிட்சர்லாந்து தூதரக பிரதிநிதிகள் மற்றும் GIZ இலங்கை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த புதிய தொழில்நுட்பம், பாசிச எரிபொருளுக்கு மாற்றாக சூரிய மற்றும் உயிர் வாயு சக்தியை பயன்படுத்தி பேக்கிங் செயல்பாட்டை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கார்பன் உமிழ்வு குறைப்பு மற்றும் நிலையான வாழ்வாதார வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கப்படுகிறது.

Incitare International மற்றும் GRFC நிறுவனத்தின் நிறுவனர் திருமதி பெரிஸ் க்வின், இந்த திட்டம் சமூகங்கள், பேக்கரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், உள்ளூர் உற்பத்தி மற்றும் புதிய ஏற்றுமதி துறைகளை வளர்க்கும் திறன் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான Incitare International பிரதிநிதி திருமதி செரில் ஆர்ன்ட் கூறுகையில், இந்த முன்னேற்றம் பல ஆண்டுகளாக தொடர்ந்த ஒத்துழைப்பு முயற்சிகளின் விளைவாக உருவானது என்றும், நிலையான வாழ்வாதாரம் மற்றும் தூய்மையான சக்தி இன்று நடைமுறையில் இருப்பதை இது நிரூபிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 2025 மார்ச் மாதத்தில் தேசிய அளவிலான பங்குதாரர் கலந்துரையாடல்கள் நடைபெற்றதுடன், பல அரசாங்க நிறுவனங்கள் இதில் பங்கேற்றிருந்தன. இதன் மூலம் சூரிய அடுப்புகள் வழங்குதல், குறைந்த செலவில் உள்ளூர் உற்பத்தி மேம்படுத்துதல் மற்றும் சமூக வாழ்வாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த முயற்சி இலங்கையின் பசுமை ஆற்றல் மாற்றத்துக்கு முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் நிலையான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.