ஐபிஎல் உலகில் சோகம் – பஞ்சாப் கிங்ஸ் முன்னாள் வீரர் அமன்பிரீத் சிங் கில் காலமானார்

 



அமன்பிரீத் சிங் கில் திடீர் மரணம் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விளையாட்டு உலகை பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. வெறும் 36 வயதிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய U-19 அணியில் விளையாடியிருந்த அமன்பிரீத் சிங் கில், விராட் கோலியின் சக வீரராக 2006 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் அறியப்பட்டார். மேலும், Punjab Kings அணிக்காக ஐபிஎல்லிலும் விளையாடியிருந்தார்.

பஞ்சாப் அணிக்காக ஆறு முதல் தரப் போட்டிகளில் விளையாடிய அவர், 11 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். முதல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்த அவர், பின்னர் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் மூத்த தேர்வுக் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், அவரது திடீர் மறைவு தொடர்பான செய்தி கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்த செய்தியை அடுத்து, விராட் கோலி சமூக வலைத்தளத்தில் தனது அதிர்ச்சியையும் துயரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல், யுவராஜ் சிங்வும் அஞ்சலி செலுத்தி, “அமன்பிரீத் சிங் கில் அமைதியான மற்றும் கடின உழைப்பாளி வீரர்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் தனது இரங்கல் செய்தியில், “முன்னாள் வீரரும் தேர்வுக்குழு உறுப்பினருமான அமன்பிரீத் சிங் கில்லின் மறைவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்” என தெரிவித்துள்ளது.

அமன்பிரீத் சிங் கில் 2007 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக ஐந்து இளைஞர் ஒருநாள் போட்டிகளிலும், ஒரு இளைஞர் டெஸ்ட் போட்டியிலும் விளையாடியிருந்தார். எனினும், 2008 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய U-19 அணியில் அவர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.