தலையை துண்டித்து வீட்டிற்கு அனுப்பும் சதித்திட்டம்! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

தலையை துண்டித்து வீட்டிற்கு அனுப்பும் சதித்திட்டம்!





கிரிந்த கடற்கரையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க தகவல் வழங்கிய நபரை கொலை செய்து, அவரது தலையை குறித்த விசாரணையை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின் முன்வைக்கும் ஒப்பந்தத்தை பொறுப்பேற்ற வாடகை கொலையாளி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி கிரிந்த கடற்கரையில் சுமார் 350 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. இதன்போது 7 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

 குறித்த போதைப்பொருள் தொகுதி தற்போது டுபாயில் மறைந்திருக்கும் 'அங்கோடை பிரியந்த' எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என மேலதிக விசாரணைகளில் தெரியவந்திருந்தது. இந்நிலையில், போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க தகவல் வழங்கிய நபரை கொலை செய்யும் ஒப்பந்தத்தை பொறுப்பேற்ற வாடகை கொலையாளி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பல சதித்திட்டங்களை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.அவர் தனது வாக்குமூலத்தில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது இந்த திட்டத்தை மேற்கொண்டதாகவும், காவலில் உள்ள பாதாள உலக உறுப்பினர் ஒப்புக்கொண்டுள்ளார்.

 இந்த ஒப்பந்தம் டுபாயில் மறைந்திருக்கும் ஒரு பாதாள உலகத்தலைவரால் தனக்கு ஒப்படைக்கப்பட்டதாகவும், அங்கொடவை தனது பாதாள உலக ராஜ்ஜியமாக மாற்றியதாகவும் சந்தேகநபர் கூறியுள்ளார்.மேலும் கிரிந்தவில் தனது போதைப்பொருள் கையிருப்பு கைப்பற்றதிலிருந்து பாதாள உலகத்தலைவர் மிகுந்த கோபத்தில் உள்ளதாகவும், கையிருப்பை கைப்பற்ற ரோஹன் ஒலுகலவுக்கு தகவல் கொடுத்தது யார் என்பதினை தீவிரமாக கண்டுபிடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர், அவரைக் கொலை செய்து அவரது தலையை ஓலுகலவின் வீட்டிற்கு அனுப்பும் ஒப்பந்தத்தை பாதாள உலகக் கும்பல் ஒன்றிடம் 'அங்கோடை பிரியந்த' ஒப்படைத்துள்ளார். அதன்படி, தற்போது காவலில் உள்ள பாதாள உலகத் தலைவர் உட்பட ஒரு குழு இந்த கொலை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. பாதாள உலகத்தலைவர் இந்த குழுவிற்கு பொலிஸ் அதிகாரிகளாக மாறுவேடமிட்டு, குறித்த நபரை பொலிஸ் ஜீப் போன்ற வாகனத்தில் கடத்துமாறு அறிவுறுத்தியிருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கிடையில், பாதாள உலகக் கும்பல் தன்னைத் தேடுவதை அறிந்த நபர் தனது வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.

 இச்சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்குப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்கவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கொலை ஒப்பந்தத்தைப் பெற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த அதிர்ச்சியூட்டும் சதித் திட்டம் தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளன. இந்த கொலை சதித்திட்டத்தை திட்டமிட்ட நபர் அங்கொட லொக்காவின் சிறந்த உதவியாளர்களில் ஒருவர் என்பதும் தெரியவந்துள்ளது.