தமது அணியைச் சுற்றி அதிகளவான வெளிப்புற எதிர்மறை விமர்சனங்கள் இருந்ததாகவும், ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கு அதீத சாதகமாக இருந்ததாகவும், முக்கிய வீரர்களின் உடற்தகுதிப் பிரச்சினைகளுமே இலங்கையின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்கள் என அணித்தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார். புதன்கிழமை பார்வையாளர்களால் நிரம்பியிருந்த கெத்தாராம மைதானத்தில் 61 ஓட்டங்களால் படுதோல்வியடைந்த இலங்கை அணி, அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறிய முதல் அணியாக மாறியது.
கடந்த ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பெருமளவு மோசமான முடிவுகளைச் சந்தித்திருந்த இலங்கை அணி, இந்த உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாகவே மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தது.
"பல நேரங்களில் நாம் காண்பதும் கேட்பதும் எதிர்மறையான விடயங்களையே," என சானக்க கூறினார். "கிரிக்கெட் வீரர்கள் என்ற வகையில் நாம் எவ்வளவு நேர்மறையாக இருக்க முயற்சித்தாலும், வெளியே எதிர்மறைத் தன்மையே நிலவுகிறது. இது இலங்கை கிரிக்கெட்டுக்கு ஒரு பெரிய இழப்பாகும். எம்மிடம் உள்ள ஒரேயொரு விளையாட்டு இதுதான், இதனை எம்மால் பாதுகாக்க முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. மைதானத்திற்கு வெளியே பார்த்தால், எத்தனை பேர் மைக்குகளுடன் நிற்கிறார்கள் என்பதை நீங்கள் காணலாம், மேலும் பலர் போட்டியைப் பார்க்காமலேயே பல விடயங்களைப் பேசுவார்கள்."
சிம்பாப்வே, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக தோல்வியடைந்து இந்த உலகக் கிண்ணத் தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறியுள்ள நிலையில், அணியின் மீதான விமர்சனங்கள் மீண்டும் கடுமையாக வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணி எதிர்கொண்ட 'எதிர்மறை விமர்சனங்கள்' மிகவும் கடுமையாக மாறியுள்ளதால், எதிர்கால வீரர்களைப் பாதுகாப்பதற்காக நாட்டின் அரசாங்கம் தலையிட வேண்டும் என சானக்க தெரிவித்தார்.
"ஏன் இந்த எதிர்மறை விமர்சனங்களைப் பரப்ப வேண்டும்? ஆம், நாங்கள் ஒரு உலகக் கிண்ணத்தை இழந்துள்ளோம், அதற்கான காரணங்கள் எமக்குத் தெரியும். அனைவருக்கும் கவலைகள் உள்ளன. அது பற்றிப் பேசி திருத்திக்கொள்வதை விட, எதிர்மறைத் தன்மையே முன்னிலைக்கு வந்துள்ளது. நாங்கள் விளையாடிவிட்டுச் சென்றுவிடுவோம், ஆனால் எதிர்காலத்தில் வரப்போகும் வீரர்களுக்காக, அரசாங்கத்தால் இதனை தடுத்து நிறுத்த முடியுமானால் அது அவர்களின் மனநலத்திற்குச் சிறந்ததாக அமையும்."
கெத்தாராம ஆடுகளத்தின் தன்மையை தாமும் அணி முகாமைத்துவமும் தவறாகக் கணித்துவிட்டதை ஏற்றுக்கொண்ட சானக்க, ஆரம்பத்திலிருந்தே பந்து இவ்வளவு சுழலும் என தான் எதிர்பார்க்கவில்லை என்றார். நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களிடம் 6 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, 8 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தடுமாறியது.
பொதுவாக, இந்த உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை விளையாடிய ஆடுகளங்கள் துடுப்பாட்டத்திற்கு மேலும் சாதகமாக இருந்திருக்கலாம் என சானக்க நம்புகிறார். தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே, இலங்கையின் ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பது குறித்து அவர் முறைப்பாடுகளை முன்வைத்திருந்தார்.
"தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே, ஆடுகளங்கள் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருக்கும் என நான் எதிர்பார்த்ததாகக் கூறியிருந்தேன். இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் இங்கு உள்ளனர். உள்ளூர் போட்டிகளில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் மற்றும் திறமை கொண்ட வீரர்களையே நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். இங்கு யாரும் பலவந்தமாகச் சேர்க்கப்படவில்லை."
"சில நேரங்களில் நாங்கள் எதிர்பார்க்கும் நிலைமைகள் எங்களுக்குக் கிடைப்பதில்லை, மற்றும் எதிர்பாராத விதமாக நாங்கள் போட்டிகளில் தோல்வியடைகிறோம். நடந்தவை குறித்து நாங்கள் மிகவும் கவலையடைகிறோம்."
தொடரின் போது இரண்டு பந்துவீச்சாளர்களையும், தொடருக்குச் சற்று முன்னதாக ஒரு பந்துவீச்சாளரையும் இலங்கை அணி இழந்தது. சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க இலங்கையின் முதல் போட்டியில் தொடைப்பகுதி தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார், அதன் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவுக்கு கெண்டைக்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. உலகக் கிண்ணத்திற்கு முன்னதாகவே வேகப்பந்து வீச்சாளர் ஈஷான் மாலிங்கவும் காயத்தினால் விலகியிருந்தார்.
"உடற்தகுதி விடயத்தில் சமரசம் செய்ய முடியாது," என சானக்க கூறினார். "எங்களுக்கு ஏற்பட்ட காயங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, ஒரு நல்ல முடிவைப் பெறுவது கடினம். வனிந்து ஹசரங்க எமக்கு மிகவும் முக்கியமான வீரர். மதீஷ பத்திரன எவ்வளவு முக்கியம் என்பதையும் நாம் அறிவோம். ஈஷான் மாலிங்கவும் காயமடைந்திருந்தார். உங்களின் உடற்தகுதி நிலையே காயங்களைத் தீர்மானிக்கிறது. உடற்தகுதிப் பிரச்சினைகள் காரணமாக அணிக்குள்ளேயே வர முடியாத சில வீரர்களும் உள்ளனர். இது பல உலகக் கிண்ணத் தொடர்களாக நாங்கள் அதிகம் பேசிய ஒரு விடயமாகும்."
கொழும்பு மற்றும் கண்டியில் அணியைப் பார்ப்பதற்காக பெருமளவில் வருகை தந்த இலங்கை ரசிகர்களிடம் சானக்க மன்னிப்பும் கோரினார்.
"அணி எப்போதும் சிறப்பாகச் செயற்படவே முயற்சிக்கிறது, அதிலும் குறிப்பாக ஒரு உலகக் கிண்ணத் தொடரில். அத்துடன் இங்குள்ள எவரும் மீண்டும் இலங்கையில் நடைபெறும் ஒரு உலகக் கிண்ணத் தொடரில் விளையாட முடியும் என நான் நினைக்கவில்லை," என சானக்க தெரிவித்தார். "அரையிறுதிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருந்தது. எங்கள் அனைவரிடமும் அந்த ஆசை இருந்தது. ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு நாங்கள் நியாயம் செய்யவில்லை. நாங்கள் நினைத்ததை ரசிகர்களுக்கு எம்மால் கொடுக்க முடியவில்லை. அதற்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்."
