வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனின் பதவிக்காலம் முடிவடைந்ததையிட்டு, இன்றைய அமர்வுடன் அவர் சபையிலிருந்து வெளியேறினார்.
வடமாகாண சபையின் 100 ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இவ் அமர்வுடன் செந்தில்நாதன் மயூரன் அவையிலிருந்து வெளியேறினார்.
இதன்போது, “இன்றுடன் நான் சபையில் இருந்து வெளியேறினாலும், வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண அமைச்சர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) சார்பாக வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 2013ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் செந்தில்நாதன் மயூரன் போட்டியிட்டார். எனினும், தேர்தலில் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் கூட்டமைப்புக்குக் கிடைக்கப்பெற்ற 2 போனஸ் ஆசனங்களில் ஒன்று, வடமாகாண சபை உறுப்பினர் ஆயுப் அஸ்மினுக்கு வழங்கப்பட்டது. மற்றைய ஆசனம் சுழற்சி முறையில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு வழங்கப்பட்டது.
இதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்துக்கான சுழற்சி முறையிலான ஆசனம், செந்தில்நாதன் மயூரனுக்கு கடந்தாண்டு வழங்கப்பட்டது.
சுழற்சி முறையிலான ஆசனத் தெரிவில் அடுத்த சந்தர்ப்பம், தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கே வழங்கப்படவுள்ளது.
