பிரான்ஸில் தமிழ் இளைஞர் வெட்டிக் கொலை : அவரது நண்பரும் தற்கொலை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பிரான்ஸில் தமிழ் இளைஞர் வெட்டிக் கொலை : அவரது நண்பரும் தற்கொலை

பிரான்ஸின் பாரிஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது நெருங்கிய நண்பரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உடலின் பல பாகங்களிலும் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் 25 வயது மதிக்கத்தக்கவரென தெரிவிக்கப்படுகின்றது.
பாரிஸ் நகரில் அமைந்துள்ள உணவகமொன்றில் கடமையாற்றிவந்த குறித்த இளைஞர் அவ் உணவகத்தின் நிலக்கீழ் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த உணவகத்தில் மோதல் ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவித்துள்ள பொலிஸார், மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, குறித்த இளைஞரை கொலை செய்தது அதே உணவகத்தில் பணிபுரியும் அவரது 34 வயதுடைய நண்பரென தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார் முற்பட்ட போது அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கொலை மற்றும் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் தெரியவராதபோதிலும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருவரும் நெருங்கிய நண்பர்களென்பது குறிப்பிடத்தக்கது.

About Unknown