இந்திய வௌிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்

 


 இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை நாட்டுக்கு வருகைதரவுள்ளார்.

நாளை பிற்பகல் அவர் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக சுற்றுலா பிரதியமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்தார்.

நாட்டில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்ஷங்கர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்ட சாகர் பந்து திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையின் முக்கிய விடயமாக இந்திய வௌிவிவகார அமைச்சரின் விஜயம் அமைந்துள்ளதாக சுற்றுலா பிரதியமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு தலைவர் ஷாஓ லேஜி, 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளைமறுதினம் நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை கண்காணிப்பதற்கான மற்றுமொரு தூதுக்குழுவுடன் அவர் வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஷாஓ லேஜி சீன ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்து மூன்றாவது முக்கிய பொறுப்பை வகிப்பவர் ஆவார்.